Tuesday, December 18, 2012

மலர்களே...மலர்களே..இனி எங்கு காண்பேன் உங்களை...

என் பழைய புத்தகம் ஒன்றைப் புரட்டுகையில், நழுவி கையில் விழுந்தது ஒரு புதையல்! நான் சிறுவயதில் தண்ணீர் ஊற்றிப் பேணி வளர்த்த செம்பருத்திச் செடியின் முதல் பூ.. கருஞ்சாந்து நிறத்தில் மெல்லிய நரம்புகளோடி, ஒரு வண்ணத்துபூச்சியின் சிறகைப்போல் மென்மையானதாக வருடங்கள் கடந்தும் உயிர்ப்பையும் வசீகரத்தையும் தன்னுள்ளே வைத்திருந்தது. பச்சிளங்குழந்தையை தரையில் கிடத்துவது போலே கவனமாக மீண்டும் உள்ளே வைத்து மூடினேன்!


எனக்கும் மலர்களுக்கும் இடையிலான சிநேகம் பற்றிய நினைவுகள் மெல்ல மனத்துள் கவியத் தொடங்கின. அம்மா பூஜை முடித்து கருகிய கதம்ப மாலைகளைப் போட்டு வைக்கும் கொல்லைப்புரத் தோட்டத்து மண்ணில் செழித்து வளர்ந்து சில்லென்று பூக்கின்ற வாடாமல்லி, வெள்ளை சாமந்திகளைச சுற்றி துளிர்க்கும் மரிக்கொழுந்து, துளசிச்செடிகள்.


தினந்தோறும் அக்காவின் தொட்டியில் மட்டும் அதிக மலர்கள் பூத்திருக்கிறதென்று அழும் குட்டித் தங்கையைத் தேற்ற இரவோடிரவாக அவளது தொட்டியில் நான் நட்டு வைக்கும் மஞ்சளும், சிவப்புமாய் மனதை அள்ளும் பட்டன் ரோஜாக்கள். வகுப்பறைத்தோழியின் வீட்டில் வெள்ளை, சிவப்பு கலந்த கலப்பினம் இருக்கிறதென்று கேள்விப்பட்டு பள்ளி முடிந்ததும் ஓடிச்சென்று மண்ணுடன் பறித்து வந்து பதியனிட்ட காட்டு ரோஜாக்கள்!


பக்கத்து வீட்டில் சுற்றுச்சுவர் தாண்டி வளர்ந்து நிற்கும் மகிழ மரம் பாதையில் தாராளமாய் மலர்கள் உதிர்க்கும். வாசனைக்கு மயங்கி பாம்பு இருக்குமென்று பயந்து ஓட்டமாய் ஓடி சேகரிக்கும் சந்தன நிற மகிழம்பூக்கள். மழைக்காலங்களில் ஆங்காங்கே வெண்பொட்டுக்களாய் ஒளிரும் தும்பைப்பூகள்.


பாட்டி வீட்டின் முற்றத்தில் துவங்கி, சுவற்றில் தொற்றி, மொட்டைமாடி வரை வளர்ந்திருக்கும் ஆஜானுபாகுவான முல்லைக்கொடி சொரியும் வெள்ளிக்கம்பி முல்லைகள். இரவு நேர தென்றல் மொத்தத்தையும் மணக்க வைக்கும், காலையில் பின்னலிட்டு வைத்துக்கொள்ளவென அம்மா ஈரத்துணியில் சுற்றி வைக்கும் நெருக்கிக்கட்டிய பிச்சிப்பூக்கள்.

கிளி விரட்டவென்று விடிகாலையில் எழுந்து காட்டுக்குப் போகையில், வந்த வேலை மறந்து வேடிக்கை பார்க்க வைக்கும் பஞ்சவர்ணக்கிளிகளுக்கு உண்டு களிக்க விதைகள் தரும் பிரகாசமான சூரியகாந்திகள்.


அத்தை வீட்டில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மஞ்சள் கனகாம்பரம். மார்கழி மாதத்தில் வண்ண வண்ணமாய் மலர்கின்ற ரோஸ், நீல, வெள்ளை டிசம்பர் பூக்கள். பள்ளிகூடத்துக் சுவரெங்கும் படரும் நீல நிறத்தில் நடுவில் வெள்ளையாய் சுழிந்திருக்கும் சங்கு புஷ்பங்கள்.

சித்தியின் வளைகாப்புக்கு சடையில் வைத்துத் தைத்த, தெருவை அள்ளும் நறுமணம் கொண்ட தாழம்பூ மடல்கள். வாடவே வாடாதாம் என்று அதிசயித்து காகிகதப்பூ என்று நாங்கள் செல்லமாய் அழைக்கும் போகன்வில்லா மலர்கள்.


அம்மனுக்கு சாத்திய மாலை என்று அப்பா வீட்டுக்கு கொண்டு வந்திருந்த மாலையில் அடுக்கடுக்காய்க் கோர்த்திருந்த சம்பங்கி பூக்களுடன், பாந்தமாய் பொருந்தியிருந்த செந்நிற சேவற்கொண்டை மலர்கள்.


பச்சைப்பசேலென்று மொட்டில் ஒரு வடிவமாகவும், பூவில் ஒரு வடிவமாகவும் சொலிக்கும் கருவேலம்பூ. அதிகாலை தோட்டத்தில் நின்றால், கருநிற வானத்தில் வாரியிறைத்திருக்கும் ஒளி விடும் நட்சரத்திரங்களை நினைவுபடுத்தும் மல்லிகை.



ஆற்றங்கரை பிள்ளையாருக்கு மாலை கட்டி போடவென கைகளில் பால் படாமல் பிளாஸ்டிக் பைகளை சுற்றிக்கொண்டு கவனமாய் சேகரித்த எருக்கம்பூக்கள்.  சிவன் கோவில் தெப்பகுளத்தில் நீர்ப்பரப்பே தெரியாமல் மறைத்திருக்கும் செந்தாமரைகள், அவற்றின் நடுவே திடீர் திடீரென தலை நீட்டும் அல்லி மொட்டுக்கள்.


ஊட்டி மலர் கண்காட்சியில் பார்த்து வியந்த சூரியாகாந்தியின் தூரத்து சொந்தங்களான டேலியாக்கள். சிவப்புதான் அழகென்றும், மஞ்சள்தான் அழகென்றும் நண்பனும் நானும் அடிக்கடி சண்டையிடும் அரளிப்பூக்கள்.

 வருங்காலத்தில் என் பிள்ளைகளுக்கு காணக் கிடைப்பது பொக்கே ஷாப்பில் இலைகள் கத்தரிக்கப்பட்டு விற்கப்படும் ரோஜா மொட்டுகளும், வண்ணம் தீட்டப்பட்ட ஆர்கிட் மலர்களுமே என்றெண்ணுகையில் கண்ணெல்லாம் நீர் நிறைத்துக் கொள்கிறது!!!

Friday, November 23, 2012

மக்கள் போல்வரே கடவுளும்

திருக்கார்த்திகை திருநாளுக்காக
தீபங்கள் வாங்கச் சென்றிருந்தேன்!

மண் விளக்குகள் விற்றுக்கொண்டிருந்தார்
வயதான பாட்டி ஒருவர்!

எப்படித் தருகிறீர்கள் அம்மா
என்று நான் வினவியதும்,
பத்து ரூபாய்க்கு நான்கு என்றார்.

சரி,இருபது ரூபாய்க்கு தாருங்கள்
என்றதும் புன்னகையுடன் ஏறிட்டார்.
"நீ பேரம் பேசுவாய், பிறகு கூட்டிக்கொள்ளலாம்
என்று எண்ணினேன் மகளே,
பத்து ரூபாய்க்கு ஐந்து என்பதே சரியான விலை,
எடுத்துக் கொள் என்று, பத்து விளக்குகளை
அடுக்கத் துவங்கினார்!

நூறு ரூபாய்க்கு தாருங்களேன் என்றதும்,
முகமும் அகமும் மலர என்
தலையில் கைவைத்து ஆசிகள் அளித்தார்.

"மக்கள் போல்வர் கயவர்" என்றார் வள்ளுவர்.
இந்த அனுபவத்தைப் பொருத்த வரையில்,
"மக்கள் போல்வரே கடவுளும்"!

Monday, October 22, 2012

அம்மா ..

அம்மா ..

பசி என்ற சொல்லே அறியாமல் வளர்த்தாய்

பார்த்து பார்த்துச் சமைத்துப் பரிமாறுவாய்


பிணி எனில் நொடியும் கண்ணுறங்க மாட்டாய்
பீலியேயாயினும் வலிக்குமென்று பதறுவாய்

புன்னகையாலே வேதனை மறக்க செய்வாய்

பூவால் அடிப்பது போல் எங்களை திட்டுவாய்

பெண் பிள்ளையென்னை பதவிசாய் ஆளாக்கினாய்

பேதை நானென விளையாட்டாய் எள்ளிச் சிரிப்பாய்

பொட்டு வைக்க கூட தெரியவில்லை உனக்கென்று போதுமென்னும் அளவுக்கு அலங்கரிபபாய்

பௌ பௌ எனும் நாயிடம் கூட அன்பையே பொழிவாய்

அஃதொரு அமிர்தவர்ஷிணி நீ..அம்மா..நினக்கு நிகர் நீயே!!

Saturday, October 20, 2012

பேருந்து பயணம்

வெகு நாட்களாயிற்று பேருந்தில்
ஒரு பயணம் மேற்கொண்டு..

கருப்பு வெள்ளை பெயின்ட்டில் நம்பர் எழுதப்பட்ட,
வயிறு பெருத்த ரோட்டோர புளிய மரங்கள்...

சோளக்கொல்லை பொம்மைகள் நிற்கும் பச்சை வயல்வெளிகள்!
நாற்று நடும் பெண்களுடன் திரியும் வெள்ளை கொக்குகள்..

ராஜ்மஹால் பட்டு, ராம்கோ சிமிண்ட்,ஆனந்த் பனியன்
விளம்பரங்கள் தாங்கிய வண்ண வண்ண வீடுகள்...

பேருந்து டிவியில் தெரியும் எம்ஜிஆர் படத்தை
எட்டி எட்டிப் பார்க்கும் கிராமத்துப் பெரிசுகள்!

முன் சீட்டில் இருந்து திரும்பிச் சிரிக்கும் குழந்தை,
பக்கத்தில் இருந்து விளையாட்டு காட்டும் பல் போன பாட்டி!

தூரத்தே தெரியும் வெயிலடர்ந்த மலைகள்,
வேகமாய் கடந்து செல்கின்ற வாகனங்கள்!

திடீரென வரும் மழை, சாரலுக்கு பயந்து
பச்சை ஷட்டர்களை இறக்கும் பயணிகள்!

பயணத்தின் இடையே சாலையோரத் தேநீர்
ஸ்பீக்கரில் ஒலிக்க்கும் லியோனி பட்டிமன்றம்!

ஜன்னலுக்கு வெளியே அற்புத உலகொன்றை
கண்முன் விரியச் செய்யும் இனியதொரு பயணம்...

வெகு நாட்களாயிற்று பேருந்தில்
ஒரு பயணம் மேற்கொண்டு..

Wednesday, September 5, 2012

ரோஜா மழை

பால்கனி பூந்தொட்டியில்

ரோஜா மொட்டு விட்டிருக்கிறது
பாரேனென்று குதித்து கொண்டாடினேன்...

பொறுத்திரு அன்பே,
இதழ் விரிக்கட்டும்
உன் புன்னைகையுடன்
ஒப்பிட்டு பார்ப்போம்
என்றாய்
வீட்டினுள் ரோஜா மழை!!

Friday, August 31, 2012

சண்டை

ஒவ்வொரு சண்டையின்
முடிவிலும் நீயோ நானோ
ஜெயிக்கிறோம்
தோற்று கொண்டேயிருக்கிறது
நம் காதல்!

Wednesday, August 29, 2012

நதிக்கரையோரம் அமைதியானதொரு இரவு!

நதிக்கரையோரம் அமைதியானதொரு இரவு!
நம்மையும் நதியையும் தவிர
எவருமில்லையென எண்ணியே

நடந்து கொண்டிருந்தோம்...

படித்துறையில் மெல்லிய அலைகள்!
வளைந்த நாணல் புதர்களிடையே 

இரு அன்னப்பறவைகள் கழுத்துகள் உரச
உறங்கிகொண்டிருப்பதை கண்டோம்...


பூனைப்பாதம் எடுத்து வைத்து
விரைந்து அவ்விடத்தைக் கடந்தோம்...

திரும்பி நாம் பார்க்கையில்
நதியில் விழுந்த நிலவின்
பிம்பம் கூட அப்பறவைகளைச் சுற்றியபடி
மிதந்து சென்றததாய் தோன்றியது நமக்கு..

புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டோம்..
முன்பை விட அழகானது அந்த இரவு!

எக்காலத்துக்கும் பொருந்தும்!!!

அச்சம் தவிர்.


ஆண்மை தவறேல்.

இளைத்தல் இகழ்ச்சி.

ஈகை திறன்.

உடலினை உறுதிசெய்.5



ஊண்மிக விரும்பு.

எண்ணுவ துயர்வு.

ஏறுபோல் நட.

ஐம்பொறி ஆட்சிகொள்.

ஒற்றுமை வலிமையாம்.10



ஓய்த லொழி.

ஔடதங் குறை.

கற்ற தொழுகு.

காலம் அழியேல்.

கிளைபல தாங்கேல்.15



கீழோர்க்கு அஞ்சேல்.

குன்றென நிமிர்ந்துநில்.

கூடித் தொழில் செய்.

கெடுப்பது சோர்வு.

கேட்டிலும் துணிந்துநில்.20



கைத்தொழில் போற்று.

கொடுமையை எதிர்த்து நில்.

கோல்கைக் கொண்டு வாழ்.

கவ்வியதை விடேல்.

சரித்திரத் தேர்ச்சிகொள்.25



சாவதற்கு அஞ்சேல்.

சிதையா நெஞ்சு கொள்.

சீறுவோர்ச் சீறு.

சுமையினுக்கு இளைத்திடேல்.

சூரரைப் போற்று.30



செய்வது துணிந்து செய்.

சேர்க்கை அழியேல்.

சைகையிற் பொருளுணர்.

சொல்வது தெளிந்து சொல்.

சோதிடந் தனையிகழ்.35



சௌரியந் தவறேல்.

ஞமலிபோல் வாழேல்.

ஞாயிறு போற்று.

ஞிமிரென இன்புறு.

ஞெகிழ்வத தருளின்.40



ஞேயங் காத்தல் செய்.

தன்மை இழவேல்.

தாழ்ந்து நடவேல்.

திருவினை வென்றுவாழ்.

தீயோர்க்கு அஞ்சேல்.45



துன்பம் மறந்திடு.

தூற்றுதல் ஒழி.

தெய்வம் நீ என்றுணர்.

தேசத்தைக் காத்தல்செய்.

தையலை உயர்வு செய்.50



தொன்மைக்கு அஞ்சேல்.

தோல்வியிற் கலங்கேல்.

தவத்தினை நிதம் புரி.

நன்று கருது.

நாளெலாம் வினைசெய்.55



நினைப்பது முடியும்.

நீதிநூல் பயில்

நுனியளவு செல்.

நூலினைப் பகுத்துணர்

நெற்றி சுருக்கிடேல்.60



நேர்படப் பேசு.

நையப் புடை.

நொந்தது சாகும்.

நோற்பது கைவிடேல்.

பணத்தினைப் பெருக்கு.65



பாட்டினில் அன்புசெய்.

பிணத்தினைப் போற்றேல்.

பீழைக்கு இடங்கொடேல்.

புதியன விரும்பு.

பூமி யிழந்திடேல்.70



பெரிதினும் பெரிதுகேள்.

பேய்களுக்கு அஞ்சேல்.

பொய்ம்மை இகழ்.

போர்த்தொழில் பழகு.

மந்திரம் வலிமை.75



மானம் போற்று.

மிடிமையில் அழிந்திடேல்.

மீளுமாறு உணர்ந்துகொள்.

முனையிலே முகத்து நில்.

மூப்பினுக்கு இடங்கொடேல்.80



மெல்லத் தெரிந்து சொல்.

மேழி போற்று.

மொய்ம்புறத் தவஞ் செய்.

மோனம் போற்று.

மௌட்டியந் தனைக் கொல்.85



யவனர்போல் முயற்சிகொள்.

யாவரையும் மதித்து வாழ்.

யௌவனம் காத்தல் செய்.

ரஸத்திலே தேர்ச்சிகொள்.

ராஜஸம் பயில்.90



ரீதி தவறேல்.

ருசிபல வென்றுணர்.

ரூபம் செம்மை செய்.

ரேகையில் கனி கொள்.

ரோதனம் தவிர்.95



ரௌத்திரம் பழகு.

லவம் பல வெள்ளமாம்.

லாகவம் பயிற்சிசெய்.

லீலை இவ் வுலகு.

(உ)லுத்தரை இகழ்.100



(உ)லோகநூல் கற்றுணர்.

லௌகிகம் ஆற்று.

வருவதை மகிழ்ந்துண்.

வானநூற் பயிற்சிகொள்.

விதையினைத் தெரிந்திடு.105



வீரியம் பெருக்கு.

வெடிப்புறப் பேசு.

வேதம் புதுமைசெய்.

வையத் தலைமைகொள்

வௌவுதல் நீக்கு.

Courtesy: http://www.tamilkalanjiyam.com/literatures/subramaniya_bharathiyar/miscellaneous_songs.html  



நீ ஒரு அற்புதன்

உன் ஒரு மணி நேர தூக்கத்தை தொலைத்து என் படுக்கையறை சுவரில் சூரியகாந்திகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும் உயிர்ப்பித்தாய்...

"மலர்கள், பட்டாம்பூச்சிகள், எல்லாம் சரி, தென்றலுக்கு என்ன செய்வாய் அன்பே.." என கேட்டுக்கொண்டே உறங்கிப்போனாய்!

மெலிதாய் ஏறி இறங்கிய உன் ஸ்வாசக்காற்று மெல்ல வருடியது என்னை தென்றலுக்கும் மேலாய்...












ஆங்கொரு நல்ல மழை நாள்!

ஆங்கொரு நல்ல மழை நாளில்


அழகுச் சிறுமி ஒருத்தியைக் கண்டேன்!

கையிலொரு குடை, முகம் நிறைய புன்னகை,

நீர்த்தாரைகளை வேடிக்கை பார்த்தபடி

மழைநிற்க காத்திருக்கிறாள்.

சிந்தையைத் தூண்டியது அவ்வழகு சித்திரம்...



காகித கப்பல்களுடன் பட்டாம்பூச்சி பிடிக்க

தும்பைச்செடியுமாய் செம்மண் நீராடியிருக்கிறது

எனது பால்யம்!



பாதம் நனையாமல் பதவிசாய் பக்கத்து

கடையில் நின்று குடைபிடிக்கிறது

அவளது பால்யம்!



மாங்காய் பத்தைகள், நெல்லிக்காய் சுவைத்து

குச்சி ஐஸ் கைகளில் வழிய ருசித்திருக்கிறது

எனது பால்யம்!



பர்கரை சாஸில் தோய்த்து கோக் சிப்பி

நாசுக்காய் டிஷ்யுவினால் ஒற்றிஎடுக்கிறது

அவளது பால்யம்!



லேடி பர்ட் சைக்கிள் முன்னிருந்த கூடையைக்

கண்டே ஆவென வாய்பிளந்திருக்கிறது

எனது பால்யம்!



வோல்க்ஸ்வகேன் கார்களில் வென்டோவுக்கும்

போலோவுக்கும் வித்தாயசம் தெரிந்திருக்கிறது

அவளது பால்யம்!



சாட் பூட் த்ரீயில் ஆரம்பித்து கல்லா மண்ணா வரை

விரிந்து தட்டாங்கல்லில் முடிந்திருக்கிறது

எனது பால்யம்!



பாம்பர் மேன் முதல் ஆங்ரி பர்ட்ஸ் வரை

அநாயசமாக புகுந்து விளையாடுகிறது

அவளது பால்யம்!



மலைப்பாக இருக்கிறது

அவளின் பால்யத்திற்க்கும்

எனது பால்யத்திற்க்கும்

எத்தனை ஒளி ஆண்டுகள்

தூரம்!!!