Wednesday, August 29, 2012

ஆங்கொரு நல்ல மழை நாள்!

ஆங்கொரு நல்ல மழை நாளில்


அழகுச் சிறுமி ஒருத்தியைக் கண்டேன்!

கையிலொரு குடை, முகம் நிறைய புன்னகை,

நீர்த்தாரைகளை வேடிக்கை பார்த்தபடி

மழைநிற்க காத்திருக்கிறாள்.

சிந்தையைத் தூண்டியது அவ்வழகு சித்திரம்...



காகித கப்பல்களுடன் பட்டாம்பூச்சி பிடிக்க

தும்பைச்செடியுமாய் செம்மண் நீராடியிருக்கிறது

எனது பால்யம்!



பாதம் நனையாமல் பதவிசாய் பக்கத்து

கடையில் நின்று குடைபிடிக்கிறது

அவளது பால்யம்!



மாங்காய் பத்தைகள், நெல்லிக்காய் சுவைத்து

குச்சி ஐஸ் கைகளில் வழிய ருசித்திருக்கிறது

எனது பால்யம்!



பர்கரை சாஸில் தோய்த்து கோக் சிப்பி

நாசுக்காய் டிஷ்யுவினால் ஒற்றிஎடுக்கிறது

அவளது பால்யம்!



லேடி பர்ட் சைக்கிள் முன்னிருந்த கூடையைக்

கண்டே ஆவென வாய்பிளந்திருக்கிறது

எனது பால்யம்!



வோல்க்ஸ்வகேன் கார்களில் வென்டோவுக்கும்

போலோவுக்கும் வித்தாயசம் தெரிந்திருக்கிறது

அவளது பால்யம்!



சாட் பூட் த்ரீயில் ஆரம்பித்து கல்லா மண்ணா வரை

விரிந்து தட்டாங்கல்லில் முடிந்திருக்கிறது

எனது பால்யம்!



பாம்பர் மேன் முதல் ஆங்ரி பர்ட்ஸ் வரை

அநாயசமாக புகுந்து விளையாடுகிறது

அவளது பால்யம்!



மலைப்பாக இருக்கிறது

அவளின் பால்யத்திற்க்கும்

எனது பால்யத்திற்க்கும்

எத்தனை ஒளி ஆண்டுகள்

தூரம்!!!















No comments: