Wednesday, May 8, 2013

பெருநகரம்


கறிக்கடை வாயிலில் வாலாட்டி வயிறு நிறைத்து
ஏடிஎம் அறைகளில் படுத்துறங்கி வாழும் நாய்கள்.

நகரத்தின் மையத்திலிருக்கும் பூங்காவில் சிறிதும் பயமின்றி
மக்களின் கைகளிலிருந்து வேர்க்கடலை கொறிக்கும் அணில்கள்.
...
நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களின் சக்கரங்களிடையே
லாவகமாய் குதித்து இரை தேடும் ஆரஞ்சுக்கண் மைனாக்கள்.

இருபக்கமும் விரிந்திருக்கும் தெருவிளக்குக் கம்பங்களின் உச்சியில்
கூடு கட்டி குஞ்சு பொறித்து சுகமாய் வாழ்ந்திடும் காகங்கள்.

குப்பைதொட்டிகளில் குவிந்து கிடக்கும் லேஸ் சிப்ஸ்
உறைகளுக்குள் பிறக்கித் தின்று உடல்வளர்க்கும் சுண்டெலிகள்.

கோவில்களில் அபிசேகிக்கப் படுகிற பாலைக் குடித்து
தேங்காய்ப் பத்தையும் தின்னப் பழகிக்கொண்ட பூனைகள்.

ஏசி பெட்டிகளுக்குள் தஞ்சம் புகுந்து வீட்டு பால்கனிகளில் ஓடி
விளையாடுகின்றன கோபுரங்களில் தங்கிப்பழகிய மணிப்புறாக்கள்.

ம்ம்ம்ம்..மனிதன் மட்டுமில்லை, விலங்குகளும் பறவைகளும் கூட
இந்த பெருநகரத்தின் சூழலுக்கு ஒத்துப்போக கற்றுத்தான் கொண்டன!!!

வேப்பமரத்தின் காதலி

அவனது பளபளக்கும் பச்சைநிற கண்களை இரசித்துக் கொண்டிருந்து, 
பச்சை மஞ்சள்நிற காய்கள் அடுக்கி பல்லாங்குழி ஆடிக்களித்து,
பரந்த மார்பில் தலைசாய்த்து, சுகந்தமான மூச்சுகாற்று தாலாட்ட,
வெகுநேரம் கண்மூடி உறங்கி எழுந்து,
நேரமாகிவிட்டது என்று நான்
... வீட்டுக்கு விரைகையில்,
அருகிலிருந்த முருங்கையும், தென்னையும்,
"அதோ போகிறாள் பாரடா வேப்பமரத்தின் காதலி!"
என்று கிசுகிசுத்து கொண்டன!

Friday, February 8, 2013

கூழாங்கல்


அலுவலகத்திலின்று வீடு திரும்பி கதவு திறந்ததும்
சில்லென்று முகத்தில் அறைந்தது குளிர் தென்றல்.
ஒரு சில துளிகளும் தெறித்தாற் போலவே தோன்றியது!

திடுக்கிட்டாலும் மெல்ல நடந்து இருக்கையில் சரிகையில்
... தளப் தளப் என்று சிற்றலைகள் கரையினில் மோதும் சப்தங்களும்.

அடுத்து மரக்கிளையொன்று சரக்கென முறிந்து
தொமீரென நீரில் விழும் ஓசையும் தொடர்ந்தது!

மருண்ட கண்களுடன் பார்வையைச் சுழற்றிய
என் கண்களில் பட்டது மேசையில் அமர்ந்திருந்த
கூழாங்கல்!

நதியிலிருந்து என்னைப் பிரித்து எடுத்து வந்தாயே!
மனிதரென்று நினைத்தாயா என்னை..
பிறந்த மண்ணையும், இயல்பையும் மறப்பதற்கு?
நீ உணர்ந்தது அனைத்தும் என் நினைவலைகள் என்றது!!!

Sunday, January 27, 2013

சமண மலை


மதிய நேர சுடுவெயிலில், கானல் நீரோடும் தர்ச்சாலைகளில்
காரில் பயணித்துக் கொண்டிருந்தோம்.
விரையும் மரங்களில் இலயித்திருந்த என் பார்வை மேலே உயர்ந்தது
"அதோ, அந்த மலையைப் பார்த்தாயா?" என்ற உன் குரலால்.
"ம்ம்.வெறும் மொட்டை மலை...ஒரு செடிகூட இல்லை" என்றேன் சுரத்தில்லாமல்.
... "நாம் இப்பொழுது அதில் ஏறப்போகிறோம்" என்றாய்.


"பசி வயிற்றைக் கிள்ளுகிறது..வெயில் வேறு. வேண்டாம்!" எனும்போதே
நெடுஞ்சாலையில் இருந்து நீ வண்டியைத் திருப்பி இருந்தாய்.
பெருமூச்சுடன் இறங்கும் பொழுது, அடிவாரத்தில் அய்யனார் கோவில்.
கிடாவெட்டு நடந்து கறிசோறு பந்தி நடந்துகொண்டிருந்தது!

பசியுடன் முறைத்த என்னை, கைபிடித்து முன்னே இழுத்துச் சென்றாய்.
வண்ணம் தீட்டப்பெற்ற அய்யனாரின் குதிரைகள், சுதைசிற்பங்கள் சூழ நிற்க,
இந்தியத் தொல்லியல் துறையின் பலகை "சமண மலைக்கு உங்களை வரவேற்கிறோம்" என்றது.

ஆச்சர்யத்தில் விரிந்த என் விழிகள் உறைந்தே போயின,
அருகில் தெரிந்த செந்தாமரைகள் நிரம்பிய குளத்தைக் கண்டு.

படிக்கட்டுகளில் தாவி ஏறத் தொடங்கினாய்...வியப்பு விலகாமலேயே நானும்!
களைத்துப் போகையில் எல்லாம் கைகொடுத்து உதவினாய்..
கொஞ்ச தூரம், கொஞ்ச தூரம் என்றே பாதி மலையை அடையச் செய்தாய்!

தண்ணீர் வழிந்திருந்தோடிய தடம் காண்பித்தாய்... அதனைத் தொடர்ந்து சென்றதும்
சமணர்கள் செதுக்கியிருந்த குடைவரை சிற்பங்கள் சட்டென்று காணக்கிடைத்தன!

தியானத்தில் ஆழ்ந்திருந்த புத்தரும், தாமரை மலர்கள் ஏந்திய யானைகளும்,
கற்சுவர்களில் வழியே நூற்றாண்டுகள் தாண்டியும் நம்முடன் உரையாட தொடங்கினார்கள்!

நான் இன்னும் மேலே சென்று வருகிறேன், இங்கேயே இரு என்று மறைந்தாய்.

திரும்பி நிலம்நோக்கிய என்னை ஏகாந்தம் தழுவிக்கொண்டது ஒரு கணத்தில்..
வெகு தூரத்தில் உயர்ந்து தெரிந்த மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்கள்,
போன்சாய் மரங்கள் போன்று தெரிந்த தென்னை மரங்கள், பச்சை வயல்வெளிகள்,
கைக்கெட்டும் தூரத்தில் பறந்து சென்ற புறாக்கூட்டங்கள், தகதகத்த மேகங்களிடையே சூரியன்,
பறவைக்கோணத்தில் இன்னும் மேருகேறித் தெரிந்த தாமரைக்குளம்.

காதோரம் சர்ப்பம் போல பெருமூச்சுடன் வீசிய மலைக்காற்றில்
மெய்மறந்து கைகளிரண்டையும் உயர்த்தி தட்டாமலை சுற்றி
குதூகலத்துடன் நான் நிமிர்கையில், எதிரே கைகட்டி நின்றிருந்தாய்.

"யாரோ வரமாட்டேன் என்று அடம்பிடித்ததாக ஞாபகம்" என்று புருவம் உயர்த்தி
நீ சிரித்த அந்த நொடியில் மறுபடியும் குழந்தையாய் மாறிப்போனேன்!

Tuesday, December 18, 2012

மலர்களே...மலர்களே..இனி எங்கு காண்பேன் உங்களை...

என் பழைய புத்தகம் ஒன்றைப் புரட்டுகையில், நழுவி கையில் விழுந்தது ஒரு புதையல்! நான் சிறுவயதில் தண்ணீர் ஊற்றிப் பேணி வளர்த்த செம்பருத்திச் செடியின் முதல் பூ.. கருஞ்சாந்து நிறத்தில் மெல்லிய நரம்புகளோடி, ஒரு வண்ணத்துபூச்சியின் சிறகைப்போல் மென்மையானதாக வருடங்கள் கடந்தும் உயிர்ப்பையும் வசீகரத்தையும் தன்னுள்ளே வைத்திருந்தது. பச்சிளங்குழந்தையை தரையில் கிடத்துவது போலே கவனமாக மீண்டும் உள்ளே வைத்து மூடினேன்!


எனக்கும் மலர்களுக்கும் இடையிலான சிநேகம் பற்றிய நினைவுகள் மெல்ல மனத்துள் கவியத் தொடங்கின. அம்மா பூஜை முடித்து கருகிய கதம்ப மாலைகளைப் போட்டு வைக்கும் கொல்லைப்புரத் தோட்டத்து மண்ணில் செழித்து வளர்ந்து சில்லென்று பூக்கின்ற வாடாமல்லி, வெள்ளை சாமந்திகளைச சுற்றி துளிர்க்கும் மரிக்கொழுந்து, துளசிச்செடிகள்.


தினந்தோறும் அக்காவின் தொட்டியில் மட்டும் அதிக மலர்கள் பூத்திருக்கிறதென்று அழும் குட்டித் தங்கையைத் தேற்ற இரவோடிரவாக அவளது தொட்டியில் நான் நட்டு வைக்கும் மஞ்சளும், சிவப்புமாய் மனதை அள்ளும் பட்டன் ரோஜாக்கள். வகுப்பறைத்தோழியின் வீட்டில் வெள்ளை, சிவப்பு கலந்த கலப்பினம் இருக்கிறதென்று கேள்விப்பட்டு பள்ளி முடிந்ததும் ஓடிச்சென்று மண்ணுடன் பறித்து வந்து பதியனிட்ட காட்டு ரோஜாக்கள்!


பக்கத்து வீட்டில் சுற்றுச்சுவர் தாண்டி வளர்ந்து நிற்கும் மகிழ மரம் பாதையில் தாராளமாய் மலர்கள் உதிர்க்கும். வாசனைக்கு மயங்கி பாம்பு இருக்குமென்று பயந்து ஓட்டமாய் ஓடி சேகரிக்கும் சந்தன நிற மகிழம்பூக்கள். மழைக்காலங்களில் ஆங்காங்கே வெண்பொட்டுக்களாய் ஒளிரும் தும்பைப்பூகள்.


பாட்டி வீட்டின் முற்றத்தில் துவங்கி, சுவற்றில் தொற்றி, மொட்டைமாடி வரை வளர்ந்திருக்கும் ஆஜானுபாகுவான முல்லைக்கொடி சொரியும் வெள்ளிக்கம்பி முல்லைகள். இரவு நேர தென்றல் மொத்தத்தையும் மணக்க வைக்கும், காலையில் பின்னலிட்டு வைத்துக்கொள்ளவென அம்மா ஈரத்துணியில் சுற்றி வைக்கும் நெருக்கிக்கட்டிய பிச்சிப்பூக்கள்.

கிளி விரட்டவென்று விடிகாலையில் எழுந்து காட்டுக்குப் போகையில், வந்த வேலை மறந்து வேடிக்கை பார்க்க வைக்கும் பஞ்சவர்ணக்கிளிகளுக்கு உண்டு களிக்க விதைகள் தரும் பிரகாசமான சூரியகாந்திகள்.


அத்தை வீட்டில் அடர்ந்து வளர்ந்திருக்கும் மஞ்சள் கனகாம்பரம். மார்கழி மாதத்தில் வண்ண வண்ணமாய் மலர்கின்ற ரோஸ், நீல, வெள்ளை டிசம்பர் பூக்கள். பள்ளிகூடத்துக் சுவரெங்கும் படரும் நீல நிறத்தில் நடுவில் வெள்ளையாய் சுழிந்திருக்கும் சங்கு புஷ்பங்கள்.

சித்தியின் வளைகாப்புக்கு சடையில் வைத்துத் தைத்த, தெருவை அள்ளும் நறுமணம் கொண்ட தாழம்பூ மடல்கள். வாடவே வாடாதாம் என்று அதிசயித்து காகிகதப்பூ என்று நாங்கள் செல்லமாய் அழைக்கும் போகன்வில்லா மலர்கள்.


அம்மனுக்கு சாத்திய மாலை என்று அப்பா வீட்டுக்கு கொண்டு வந்திருந்த மாலையில் அடுக்கடுக்காய்க் கோர்த்திருந்த சம்பங்கி பூக்களுடன், பாந்தமாய் பொருந்தியிருந்த செந்நிற சேவற்கொண்டை மலர்கள்.


பச்சைப்பசேலென்று மொட்டில் ஒரு வடிவமாகவும், பூவில் ஒரு வடிவமாகவும் சொலிக்கும் கருவேலம்பூ. அதிகாலை தோட்டத்தில் நின்றால், கருநிற வானத்தில் வாரியிறைத்திருக்கும் ஒளி விடும் நட்சரத்திரங்களை நினைவுபடுத்தும் மல்லிகை.



ஆற்றங்கரை பிள்ளையாருக்கு மாலை கட்டி போடவென கைகளில் பால் படாமல் பிளாஸ்டிக் பைகளை சுற்றிக்கொண்டு கவனமாய் சேகரித்த எருக்கம்பூக்கள்.  சிவன் கோவில் தெப்பகுளத்தில் நீர்ப்பரப்பே தெரியாமல் மறைத்திருக்கும் செந்தாமரைகள், அவற்றின் நடுவே திடீர் திடீரென தலை நீட்டும் அல்லி மொட்டுக்கள்.


ஊட்டி மலர் கண்காட்சியில் பார்த்து வியந்த சூரியாகாந்தியின் தூரத்து சொந்தங்களான டேலியாக்கள். சிவப்புதான் அழகென்றும், மஞ்சள்தான் அழகென்றும் நண்பனும் நானும் அடிக்கடி சண்டையிடும் அரளிப்பூக்கள்.

 வருங்காலத்தில் என் பிள்ளைகளுக்கு காணக் கிடைப்பது பொக்கே ஷாப்பில் இலைகள் கத்தரிக்கப்பட்டு விற்கப்படும் ரோஜா மொட்டுகளும், வண்ணம் தீட்டப்பட்ட ஆர்கிட் மலர்களுமே என்றெண்ணுகையில் கண்ணெல்லாம் நீர் நிறைத்துக் கொள்கிறது!!!

Friday, November 23, 2012

மக்கள் போல்வரே கடவுளும்

திருக்கார்த்திகை திருநாளுக்காக
தீபங்கள் வாங்கச் சென்றிருந்தேன்!

மண் விளக்குகள் விற்றுக்கொண்டிருந்தார்
வயதான பாட்டி ஒருவர்!

எப்படித் தருகிறீர்கள் அம்மா
என்று நான் வினவியதும்,
பத்து ரூபாய்க்கு நான்கு என்றார்.

சரி,இருபது ரூபாய்க்கு தாருங்கள்
என்றதும் புன்னகையுடன் ஏறிட்டார்.
"நீ பேரம் பேசுவாய், பிறகு கூட்டிக்கொள்ளலாம்
என்று எண்ணினேன் மகளே,
பத்து ரூபாய்க்கு ஐந்து என்பதே சரியான விலை,
எடுத்துக் கொள் என்று, பத்து விளக்குகளை
அடுக்கத் துவங்கினார்!

நூறு ரூபாய்க்கு தாருங்களேன் என்றதும்,
முகமும் அகமும் மலர என்
தலையில் கைவைத்து ஆசிகள் அளித்தார்.

"மக்கள் போல்வர் கயவர்" என்றார் வள்ளுவர்.
இந்த அனுபவத்தைப் பொருத்த வரையில்,
"மக்கள் போல்வரே கடவுளும்"!

Monday, October 22, 2012

அம்மா ..

அம்மா ..

பசி என்ற சொல்லே அறியாமல் வளர்த்தாய்

பார்த்து பார்த்துச் சமைத்துப் பரிமாறுவாய்


பிணி எனில் நொடியும் கண்ணுறங்க மாட்டாய்
பீலியேயாயினும் வலிக்குமென்று பதறுவாய்

புன்னகையாலே வேதனை மறக்க செய்வாய்

பூவால் அடிப்பது போல் எங்களை திட்டுவாய்

பெண் பிள்ளையென்னை பதவிசாய் ஆளாக்கினாய்

பேதை நானென விளையாட்டாய் எள்ளிச் சிரிப்பாய்

பொட்டு வைக்க கூட தெரியவில்லை உனக்கென்று போதுமென்னும் அளவுக்கு அலங்கரிபபாய்

பௌ பௌ எனும் நாயிடம் கூட அன்பையே பொழிவாய்

அஃதொரு அமிர்தவர்ஷிணி நீ..அம்மா..நினக்கு நிகர் நீயே!!