Wednesday, May 8, 2013

பெருநகரம்


கறிக்கடை வாயிலில் வாலாட்டி வயிறு நிறைத்து
ஏடிஎம் அறைகளில் படுத்துறங்கி வாழும் நாய்கள்.

நகரத்தின் மையத்திலிருக்கும் பூங்காவில் சிறிதும் பயமின்றி
மக்களின் கைகளிலிருந்து வேர்க்கடலை கொறிக்கும் அணில்கள்.
...
நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களின் சக்கரங்களிடையே
லாவகமாய் குதித்து இரை தேடும் ஆரஞ்சுக்கண் மைனாக்கள்.

இருபக்கமும் விரிந்திருக்கும் தெருவிளக்குக் கம்பங்களின் உச்சியில்
கூடு கட்டி குஞ்சு பொறித்து சுகமாய் வாழ்ந்திடும் காகங்கள்.

குப்பைதொட்டிகளில் குவிந்து கிடக்கும் லேஸ் சிப்ஸ்
உறைகளுக்குள் பிறக்கித் தின்று உடல்வளர்க்கும் சுண்டெலிகள்.

கோவில்களில் அபிசேகிக்கப் படுகிற பாலைக் குடித்து
தேங்காய்ப் பத்தையும் தின்னப் பழகிக்கொண்ட பூனைகள்.

ஏசி பெட்டிகளுக்குள் தஞ்சம் புகுந்து வீட்டு பால்கனிகளில் ஓடி
விளையாடுகின்றன கோபுரங்களில் தங்கிப்பழகிய மணிப்புறாக்கள்.

ம்ம்ம்ம்..மனிதன் மட்டுமில்லை, விலங்குகளும் பறவைகளும் கூட
இந்த பெருநகரத்தின் சூழலுக்கு ஒத்துப்போக கற்றுத்தான் கொண்டன!!!

வேப்பமரத்தின் காதலி

அவனது பளபளக்கும் பச்சைநிற கண்களை இரசித்துக் கொண்டிருந்து, 
பச்சை மஞ்சள்நிற காய்கள் அடுக்கி பல்லாங்குழி ஆடிக்களித்து,
பரந்த மார்பில் தலைசாய்த்து, சுகந்தமான மூச்சுகாற்று தாலாட்ட,
வெகுநேரம் கண்மூடி உறங்கி எழுந்து,
நேரமாகிவிட்டது என்று நான்
... வீட்டுக்கு விரைகையில்,
அருகிலிருந்த முருங்கையும், தென்னையும்,
"அதோ போகிறாள் பாரடா வேப்பமரத்தின் காதலி!"
என்று கிசுகிசுத்து கொண்டன!

Friday, February 8, 2013

கூழாங்கல்


அலுவலகத்திலின்று வீடு திரும்பி கதவு திறந்ததும்
சில்லென்று முகத்தில் அறைந்தது குளிர் தென்றல்.
ஒரு சில துளிகளும் தெறித்தாற் போலவே தோன்றியது!

திடுக்கிட்டாலும் மெல்ல நடந்து இருக்கையில் சரிகையில்
... தளப் தளப் என்று சிற்றலைகள் கரையினில் மோதும் சப்தங்களும்.

அடுத்து மரக்கிளையொன்று சரக்கென முறிந்து
தொமீரென நீரில் விழும் ஓசையும் தொடர்ந்தது!

மருண்ட கண்களுடன் பார்வையைச் சுழற்றிய
என் கண்களில் பட்டது மேசையில் அமர்ந்திருந்த
கூழாங்கல்!

நதியிலிருந்து என்னைப் பிரித்து எடுத்து வந்தாயே!
மனிதரென்று நினைத்தாயா என்னை..
பிறந்த மண்ணையும், இயல்பையும் மறப்பதற்கு?
நீ உணர்ந்தது அனைத்தும் என் நினைவலைகள் என்றது!!!

Sunday, January 27, 2013

சமண மலை


மதிய நேர சுடுவெயிலில், கானல் நீரோடும் தர்ச்சாலைகளில்
காரில் பயணித்துக் கொண்டிருந்தோம்.
விரையும் மரங்களில் இலயித்திருந்த என் பார்வை மேலே உயர்ந்தது
"அதோ, அந்த மலையைப் பார்த்தாயா?" என்ற உன் குரலால்.
"ம்ம்.வெறும் மொட்டை மலை...ஒரு செடிகூட இல்லை" என்றேன் சுரத்தில்லாமல்.
... "நாம் இப்பொழுது அதில் ஏறப்போகிறோம்" என்றாய்.


"பசி வயிற்றைக் கிள்ளுகிறது..வெயில் வேறு. வேண்டாம்!" எனும்போதே
நெடுஞ்சாலையில் இருந்து நீ வண்டியைத் திருப்பி இருந்தாய்.
பெருமூச்சுடன் இறங்கும் பொழுது, அடிவாரத்தில் அய்யனார் கோவில்.
கிடாவெட்டு நடந்து கறிசோறு பந்தி நடந்துகொண்டிருந்தது!

பசியுடன் முறைத்த என்னை, கைபிடித்து முன்னே இழுத்துச் சென்றாய்.
வண்ணம் தீட்டப்பெற்ற அய்யனாரின் குதிரைகள், சுதைசிற்பங்கள் சூழ நிற்க,
இந்தியத் தொல்லியல் துறையின் பலகை "சமண மலைக்கு உங்களை வரவேற்கிறோம்" என்றது.

ஆச்சர்யத்தில் விரிந்த என் விழிகள் உறைந்தே போயின,
அருகில் தெரிந்த செந்தாமரைகள் நிரம்பிய குளத்தைக் கண்டு.

படிக்கட்டுகளில் தாவி ஏறத் தொடங்கினாய்...வியப்பு விலகாமலேயே நானும்!
களைத்துப் போகையில் எல்லாம் கைகொடுத்து உதவினாய்..
கொஞ்ச தூரம், கொஞ்ச தூரம் என்றே பாதி மலையை அடையச் செய்தாய்!

தண்ணீர் வழிந்திருந்தோடிய தடம் காண்பித்தாய்... அதனைத் தொடர்ந்து சென்றதும்
சமணர்கள் செதுக்கியிருந்த குடைவரை சிற்பங்கள் சட்டென்று காணக்கிடைத்தன!

தியானத்தில் ஆழ்ந்திருந்த புத்தரும், தாமரை மலர்கள் ஏந்திய யானைகளும்,
கற்சுவர்களில் வழியே நூற்றாண்டுகள் தாண்டியும் நம்முடன் உரையாட தொடங்கினார்கள்!

நான் இன்னும் மேலே சென்று வருகிறேன், இங்கேயே இரு என்று மறைந்தாய்.

திரும்பி நிலம்நோக்கிய என்னை ஏகாந்தம் தழுவிக்கொண்டது ஒரு கணத்தில்..
வெகு தூரத்தில் உயர்ந்து தெரிந்த மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரங்கள்,
போன்சாய் மரங்கள் போன்று தெரிந்த தென்னை மரங்கள், பச்சை வயல்வெளிகள்,
கைக்கெட்டும் தூரத்தில் பறந்து சென்ற புறாக்கூட்டங்கள், தகதகத்த மேகங்களிடையே சூரியன்,
பறவைக்கோணத்தில் இன்னும் மேருகேறித் தெரிந்த தாமரைக்குளம்.

காதோரம் சர்ப்பம் போல பெருமூச்சுடன் வீசிய மலைக்காற்றில்
மெய்மறந்து கைகளிரண்டையும் உயர்த்தி தட்டாமலை சுற்றி
குதூகலத்துடன் நான் நிமிர்கையில், எதிரே கைகட்டி நின்றிருந்தாய்.

"யாரோ வரமாட்டேன் என்று அடம்பிடித்ததாக ஞாபகம்" என்று புருவம் உயர்த்தி
நீ சிரித்த அந்த நொடியில் மறுபடியும் குழந்தையாய் மாறிப்போனேன்!