Wednesday, May 8, 2013

பெருநகரம்


கறிக்கடை வாயிலில் வாலாட்டி வயிறு நிறைத்து
ஏடிஎம் அறைகளில் படுத்துறங்கி வாழும் நாய்கள்.

நகரத்தின் மையத்திலிருக்கும் பூங்காவில் சிறிதும் பயமின்றி
மக்களின் கைகளிலிருந்து வேர்க்கடலை கொறிக்கும் அணில்கள்.
...
நெடுஞ்சாலையில் விரையும் வாகனங்களின் சக்கரங்களிடையே
லாவகமாய் குதித்து இரை தேடும் ஆரஞ்சுக்கண் மைனாக்கள்.

இருபக்கமும் விரிந்திருக்கும் தெருவிளக்குக் கம்பங்களின் உச்சியில்
கூடு கட்டி குஞ்சு பொறித்து சுகமாய் வாழ்ந்திடும் காகங்கள்.

குப்பைதொட்டிகளில் குவிந்து கிடக்கும் லேஸ் சிப்ஸ்
உறைகளுக்குள் பிறக்கித் தின்று உடல்வளர்க்கும் சுண்டெலிகள்.

கோவில்களில் அபிசேகிக்கப் படுகிற பாலைக் குடித்து
தேங்காய்ப் பத்தையும் தின்னப் பழகிக்கொண்ட பூனைகள்.

ஏசி பெட்டிகளுக்குள் தஞ்சம் புகுந்து வீட்டு பால்கனிகளில் ஓடி
விளையாடுகின்றன கோபுரங்களில் தங்கிப்பழகிய மணிப்புறாக்கள்.

ம்ம்ம்ம்..மனிதன் மட்டுமில்லை, விலங்குகளும் பறவைகளும் கூட
இந்த பெருநகரத்தின் சூழலுக்கு ஒத்துப்போக கற்றுத்தான் கொண்டன!!!

வேப்பமரத்தின் காதலி

அவனது பளபளக்கும் பச்சைநிற கண்களை இரசித்துக் கொண்டிருந்து, 
பச்சை மஞ்சள்நிற காய்கள் அடுக்கி பல்லாங்குழி ஆடிக்களித்து,
பரந்த மார்பில் தலைசாய்த்து, சுகந்தமான மூச்சுகாற்று தாலாட்ட,
வெகுநேரம் கண்மூடி உறங்கி எழுந்து,
நேரமாகிவிட்டது என்று நான்
... வீட்டுக்கு விரைகையில்,
அருகிலிருந்த முருங்கையும், தென்னையும்,
"அதோ போகிறாள் பாரடா வேப்பமரத்தின் காதலி!"
என்று கிசுகிசுத்து கொண்டன!