Monday, October 22, 2012

அம்மா ..

அம்மா ..

பசி என்ற சொல்லே அறியாமல் வளர்த்தாய்

பார்த்து பார்த்துச் சமைத்துப் பரிமாறுவாய்


பிணி எனில் நொடியும் கண்ணுறங்க மாட்டாய்
பீலியேயாயினும் வலிக்குமென்று பதறுவாய்

புன்னகையாலே வேதனை மறக்க செய்வாய்

பூவால் அடிப்பது போல் எங்களை திட்டுவாய்

பெண் பிள்ளையென்னை பதவிசாய் ஆளாக்கினாய்

பேதை நானென விளையாட்டாய் எள்ளிச் சிரிப்பாய்

பொட்டு வைக்க கூட தெரியவில்லை உனக்கென்று போதுமென்னும் அளவுக்கு அலங்கரிபபாய்

பௌ பௌ எனும் நாயிடம் கூட அன்பையே பொழிவாய்

அஃதொரு அமிர்தவர்ஷிணி நீ..அம்மா..நினக்கு நிகர் நீயே!!

Saturday, October 20, 2012

பேருந்து பயணம்

வெகு நாட்களாயிற்று பேருந்தில்
ஒரு பயணம் மேற்கொண்டு..

கருப்பு வெள்ளை பெயின்ட்டில் நம்பர் எழுதப்பட்ட,
வயிறு பெருத்த ரோட்டோர புளிய மரங்கள்...

சோளக்கொல்லை பொம்மைகள் நிற்கும் பச்சை வயல்வெளிகள்!
நாற்று நடும் பெண்களுடன் திரியும் வெள்ளை கொக்குகள்..

ராஜ்மஹால் பட்டு, ராம்கோ சிமிண்ட்,ஆனந்த் பனியன்
விளம்பரங்கள் தாங்கிய வண்ண வண்ண வீடுகள்...

பேருந்து டிவியில் தெரியும் எம்ஜிஆர் படத்தை
எட்டி எட்டிப் பார்க்கும் கிராமத்துப் பெரிசுகள்!

முன் சீட்டில் இருந்து திரும்பிச் சிரிக்கும் குழந்தை,
பக்கத்தில் இருந்து விளையாட்டு காட்டும் பல் போன பாட்டி!

தூரத்தே தெரியும் வெயிலடர்ந்த மலைகள்,
வேகமாய் கடந்து செல்கின்ற வாகனங்கள்!

திடீரென வரும் மழை, சாரலுக்கு பயந்து
பச்சை ஷட்டர்களை இறக்கும் பயணிகள்!

பயணத்தின் இடையே சாலையோரத் தேநீர்
ஸ்பீக்கரில் ஒலிக்க்கும் லியோனி பட்டிமன்றம்!

ஜன்னலுக்கு வெளியே அற்புத உலகொன்றை
கண்முன் விரியச் செய்யும் இனியதொரு பயணம்...

வெகு நாட்களாயிற்று பேருந்தில்
ஒரு பயணம் மேற்கொண்டு..