Friday, November 23, 2012

மக்கள் போல்வரே கடவுளும்

திருக்கார்த்திகை திருநாளுக்காக
தீபங்கள் வாங்கச் சென்றிருந்தேன்!

மண் விளக்குகள் விற்றுக்கொண்டிருந்தார்
வயதான பாட்டி ஒருவர்!

எப்படித் தருகிறீர்கள் அம்மா
என்று நான் வினவியதும்,
பத்து ரூபாய்க்கு நான்கு என்றார்.

சரி,இருபது ரூபாய்க்கு தாருங்கள்
என்றதும் புன்னகையுடன் ஏறிட்டார்.
"நீ பேரம் பேசுவாய், பிறகு கூட்டிக்கொள்ளலாம்
என்று எண்ணினேன் மகளே,
பத்து ரூபாய்க்கு ஐந்து என்பதே சரியான விலை,
எடுத்துக் கொள் என்று, பத்து விளக்குகளை
அடுக்கத் துவங்கினார்!

நூறு ரூபாய்க்கு தாருங்களேன் என்றதும்,
முகமும் அகமும் மலர என்
தலையில் கைவைத்து ஆசிகள் அளித்தார்.

"மக்கள் போல்வர் கயவர்" என்றார் வள்ளுவர்.
இந்த அனுபவத்தைப் பொருத்த வரையில்,
"மக்கள் போல்வரே கடவுளும்"!